கிட்டிப்புள்
அடித்து
விளையாடிய
வெட்டக் காணி.
துலா இழுத்து
அள்ளிக்குளித்த

தண்ணியின்
குளிர்மை.
வெயிலுக்கு
ஒதுங்கும்
வேப்ப மர
நிழல்.
மாமரமேறி
ஆய்ந்து தின்ற
கொந்தல்
மாம்பழ சுவை.
அப்பப்ப
தெருவேறும்
அயல் வீட்டு
சண்டைகள்.
வெள்ளி தோறும்
குறை நிறைகளுடன்
சந்திக்கும்
தட்டாங்குளப் பிள்ளையார்.
எண்ணை தப்பி
இரட்டை ஜடை
பின்னலுடன்
சைக்கிளில்
உலா வரும்
உள்ளூர் அழகிகள்.
படித்து பட்டங்கள்
பெற முன்னரே
பட்டங்கள்
அள்ளி வழங்கும்
நட்பு வட்டாரம்.
மழை
விட்டுச் செல்லும்
மண் வாசம்.
எல்லாமே
தொலைத்த பின்
உயிர் மட்டும்
கையிலேந்தி
சிதறிவிட்டோம்
நினைவுகளை,
சிந்த விடாமல்.
பாரதி.சு
3 comments:
தமிழிஷ் சப்மிட் பண்ணுங்க வாழ்த்துக்கள்
வணக்கம் அறிவே தெய்வம்,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
vaazhthukkal.
mullaiamuthan
http://kaatruveli-ithazh.blogspot.com
Post a Comment